திருவள்ளூர் அருகே திருமணம் நிச்சயமான மறுநாள் கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற கல்லூரி பேராசிரியையை காணவில்லை என தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை அடுத்த தொழுவூரைச் சேர்ந்தவர் தெய்வீகம். இவரது மகள் குறிஞ்சிப்பிரியா (27). இவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மே 26-ம் தேதி குறிஞ்சிப்பிரியாவுக்கு, தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மறுநாள் வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறிஞ்சிபிரியா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை தெய்வீகம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.